சிவகங்கை, டிச.10: காளையார்கோவில் அருகே கலைக்குளம் வழியாக சென்ற அரசு பஸ் சாலை பழுதால் நிறுத்தப்பட்ட நிலையில் சாலையை பராமரிக்கவும், பஸ்சை மீண்டும் இயக்கவும் வலியுறுத்தி கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனு அளிக்கப்பட்டது. பங்குத்தந்தை செல்வராஜ், கலைக்குளம் பகுதி பங்கு மக்கள், சுற்றுப்பகுதி கிராமத்தினர் அளித்த மனுவில், காளையார்கோவில் தாலுகா குருந்தங்குடி ஊராட்சியில் கலைக்குளம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிலுக்கபட்டி, நேமம், சாலையிலிருந்து கே.பறக்குளம், ஓ.மருதங்குடி, கலைக்குளம், கட்டியக்காரசிரமம், ஒருமணியேந்தல், எட்டியக்குடி வழி சருகணி செல்லும் சாலை போடப்பட்டது. சுமார் 3.8 கி.மீ தூரமுள்ள இச்சாலை அமைக்கப்பட்ட பிறகு கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து மதுரையில் இருந்து ஆனந்தூர் வழி சிலுக்கபட்டி, கலைக்குளம் செல்லும் அரசு பஸ் இயக்கப்பட்டது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த பஸ் இவ்வழி சென்று வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், கிராமத்தினருக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் தார் சாலை மிகவும் சேதமடைந்ததாலும், சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சாலையை மறைத்துள்ளதாலும் அரசு பஸ் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்கவும், நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.