×

தொண்டி-காட்டுக்குடியிருப்பு இடையே விபத்து ஏற்படுத்தும் கரடுமுரடான சாலை

சிவகங்கை, டிச. 10:  சிவகங்கை அருகே தொண்டி சாலையிலிருந்து காட்டுக்குடியிருப்பு செல்லும் சாலை குண்டும், குழியுமாய் உள்ளது. சிவகங்கை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரமுள்ள காட்டுக்குடியிருப்பு இணைப்புச்சாலை பிரிந்து செல்கிறது. காட்டுக்குடியிருப்பு வழியாக சிவகங்கை நகர் விரிவாக்க பகுதியான அல்லூர் பனங்காடி சாலை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக மண்சாலையில் இருந்து தார்ச்சாலையாக இந்த சாலை மாற்றப்பட்டது. அதன் பிறகு புதிய சாலையும் போடப்படவில்லை. பேட்ஜ் ஒர்க் எனப்படும் பராமரிப்பும் செய்யப்பட வில்லை. இதனால் சாலையில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கற்கள் பெயர்ந்து வாகனத்தின் டயர்களை பதம் பார்க்கிறது. சாலையின் இருபுறமும் எவ்வித மண் பிடிமானமும் இல்லாமல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வரும்போது டூவீலர், ஆட்டோக்கள் சாலையோரத்தில் வாகனங்களை ஒதுக்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது: சிவகங்கையின் விரிவாக்க பகுதிகளுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையை கண்டுகொள்ளவே இல்லை. எவ்வித பராமரிப்பு பணிகளும் கூட செய்யாமல் உள்ளனர். பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சாலை வழியாக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதியடைகின்றனர். அதிகப்படியாக கற்கள் பெயர்ந்தும், பள்ளங்களும் உள்ளதால் இரவு நேரத்தில் டூவீலரில் வரும்போது விழுந்து செல்லும் நிலை உள்ளது. உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




Tags : road ,accident ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...