கொடைக்கானல், டிச. 10: கொடைக்கானலில் குளிர்கால சுற்றுலா விழாவை நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். 10 நாட்கள் மே மாதத்தில் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, வாத்து பிடிக்கும் போட்டி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதேபோல் குளிர்கால சுற்றுலா விழா நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கொடைக்கானல் வாழ் மக்கள் கூறுகையில், ‘குளிர்காலமான தற்போது கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்பவர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை சுற்றுலா துறையின் சார்பில் கொடைக்கானலில் குளிர்கால சுற்றுலா விழா நடத்தப்பட்டது. அதன்பின் இவ்விழா நடத்துவது கைவிடப்பட்டது. தற்போது வரை இவ்விழா நடத்தப்படாமல் உள்ளது. எனவே இந்த ஆண்டாவது கொடைக்கானலில் குளிர்கால சுற்றுலா விழா நடத்த வேண்டும்’ என்றனர்.