நிர்வாணப்படுத்தி கணவர் டார்ச்சர் செய்வதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம், டிச.10: சேலத்தில் நிர்வாணப்படுத்தி கணவர் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக கூறி, தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் சாமிநாதபுரம் அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (32). இவர், நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்திற்கு வந்தார். அவர், திடீரென தனது கைப்பையில் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலை வழியே ஊற்றிக்கொண்டு, தனது கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தியவாறு இது தானே கலெக்டர் ஆபிஸ் என்று கேட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் நின்றவர்கள் அவரிடம் இருந்து பாட்டிலை பிடுங்கினர். ஆனாலும் அவர் கத்திக்கொண்டே தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர், மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அழைத்தனர். அவர்கள் வந்து, ஆரோக்கியமேரியை மீட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ ஜான்கென்னடி மற்றும் போலீசார் வந்து, அப்பெண்ணை  விசாரித்தனர். அதில் அவர், கையில் கலெக்டரிடம் கொடுப்பதற்காக ஒரு மனு வைத்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் எனது தாயாருடன் வசித்து வருகிறேன். சிறுவயதாக இருக்கும்போதே, எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இடைப்பாடியை சேர்ந்த செல்வம் (எ) ஜெயராஜ்க்கு என்னை திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்தின்போது 10 பவுன் நகை மற்றும் வரதட்சணையாக பணம் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் வீடு கட்டுவதற்கு ₹3.5 லட்சம் வேண்டும் என கேட்டு கணவர் ஜெயராஜ், மாமனார், மாமியார், கணவரின் அத்தை ஆகியோர் அடித்து கொடுமைப்படுத்தினர். நான் 3 முறை கருத்தரித்த நிலையில், கருவை கலைத்து விட்டனர். இரவு நேரத்தில் எனது கணவர் என்னை முழு நிர்வாணப்படுத்தி, தோசை கரண்டியால் சூடு வைப்பார். தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இந்த டார்ச்சர் தாங்க முடியாமல், 6 முறை சங்ககிரி போலீசிலும், எடப்பாடி போலீசிலும் புகார் கொடுத்தேன். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 5ம் தேதி கணவர் ஜெயராஜ் வேலை செய்யும் சங்ககிரியில் உள்ள கல்குவாரிக்கு சென்று என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அப்போது மிக கடுமையாக தாக்கினார். அக்கம் பக்கத்தினர் என்னை மீட்டு சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு புகார் அளித்தேன். அங்கிருந்த எஸ்ஐ, ஏட்டு, எனது கணவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை மிரட்டினர்.

அதனால் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவர், மாமனார், மாமியார், கணவரின் அத்தை ஆகிய 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்காக யாரும் இல்லாத காரணத்தால், வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்து இங்கு வந்தேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். மீட்கப்பட்ட இளம்பெண் ஆரோக்கியமேரியை போலீசார், டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சங்ககரி அனைத்து மகளிர் போலீசில் ஆரோக்கியமேரி கொடுத்த புகாரை பதிவு செய்துள்ளனர். அதனால், அந்த புகார் மனு மீது வழக்கு நடவடிக்கை எடுத்து, கணவர் ஜெயராஜை பிடித்து விசாரிக்கவுள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: