×

ரங்கபிள்ளைவீதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை

புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரி ரங்கபிள்ளை வீதி கடைகளில் அதிரடியாக சோதனை நடத்திய நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். புதுவையில் பிளாஸ்டிக் தடை சட்டம் அமலில் உள்ளது. குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பைகளை விற்கக் கூடாது என நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே நேற்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ரங்கபிள்ளை வீதியிலுள்ள கடைகளில் அதிரடியாக சோதனையில் இறங்கினர். ஒவ்வொரு கடையிலும் புகுந்து அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் ரக பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 அரசு தடை செய்து வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்ற பிளாஸ்டிக் பைகள் மட்டுமின்றி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்திய நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது அடுத்தகட்டமாக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதால் வியாபாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.

Tags : stores ,Rangapillai Street ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...