மரக்காணம், டிச. 10: மரக்காணம் அருகே 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆத்திக்குப்பம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இங்குள்ள தார் சாலை மூலம் மரக்காணம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது.