கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை இயக்குநர் திடீர் ஆய்வு செய்தார். சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கள்ளக்குறிச்சி வழியாக சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை இயக்குநர் சைலேந்திரபாபு கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப் பட்டு இருந்த உபகரணங்கள் புயல் வெள்ளம், மற்றும் கனமழை நேரங்களில் பேரிடர் காலங்களில் பயன்படுத்த கூடிய மீட்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்து முதலில் ஆய்வு மேற்கொண்டார். அதாவது மரம் வெட்டும் இயந்திரம், நீர் மூழ்கி கருவி, இரவு நேரங்களில் மின் தடையின்போது பயன்படுத்த கூடிய அஸ்கா லைட் ஆகிய உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்த செய்முறை விளக்கத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.