×

காதலித்து திருமணம் செய்த மனைவி கடத்தல்

கடலூர்,  டிச. 10: கடலூர் அருகே காதலித்து திருமணம் செய்த மனைவியை அவரது  பெற்றோர் மற்றும் சிலர் கடத்தி சென்றுவிட்டதாக மாவட்ட எஸ்பியிடம் கணவர்  புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து கடலூர் வட்டம் மேற்கு ராமாபுரத்தைச்  சேர்ந்த துரைராஜ் (22) கடலூர் எஸ்பியிடம் கொடுத்த புகார் மனுவில்  கூறியிருப்பதாவது: நான் மேற்கு ராமாபுரத்தில் வசித்து வருகிறேன். எனது  ஊருக்கு அருகாமையில் உள்ள அரசடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகள்  ஹேமலதாவும், நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்நிலையில்  எங்களது காதல் விவகாரம் ஹேமலதாவின் பெற்றோருக்கு தெரிந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஹேமலதாவுக்கு வேறுஇடத்தில் திருமணம்  செய்வதற்கு முயற்சித்தனர். இதில் ஹேமலதாவுக்கு உடன்பாடில்லை. இதற்கிடையே  நானும், ஹேமலதாவும் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம். அதன்படி எங்களது  நண்பர்கள் முன்னிலையில் விருத்தாசலம் முருகன் கோயிலில் கடந்த 7ஆம் தேதி  திருமணம் செய்து கொண்டோம். இதற்கிடையே நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் எனது  மனைவி ஹேமலதாவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் எங்களை  காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் நாங்கள் இருவரும்  விரும்பி திருமணம் செய்து கொண்டோம் என்றும், மேஜர் என்பதால் அறிவுரை கூறி  அனுப்பிவிட்டனர். இதற்கிடையே காவல் நிலையத்தில் இருந்து நானும், எனது மனைவி  ஹேமலதாவும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஹேமலதாவின் பெற்றோர்  மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் எங்களை வழிமறித்தனர்.

மேலும் எனது மனைவி  ஹேமலதாவை என்னிடமிருந்து பிரித்து கடத்திச்சென்றுவிட்டனர். இதுகுறித்து  நடுவீரப்பட்டு மற்றும் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார்  தெரிவித்துள்ளேன். கடத்தப்பட்ட எனது மனைவி உயிருடன் இருக்கிறாரா என்பது  சந்தேகமாக உள்ளது. எனவே அவரை மீட்டு கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து மனு மீது உரிய  விசாரணை நடத்த  சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல்துறை  உத்தரவிட்டது.

Tags : Abduction ,
× RELATED “சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும்...