கோபி, டிச.10: கோபி அருகே மாட்டு வண்டியில் பயணம் செய்து இளம்ஜோடி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து அசத்தினர். கோபி அருகே உள்ள அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடந்த பட்டதாரி மணமக்களின் இந்த திருமணம் பாரம்பரிய முறையிலும், கலாசாரத்தை நினைவு கூறும் வகையிலும் இருந்தது.சேலம் மாவட்டம் எடப்பாடி ஆவணியூர் மேல்முகம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்-வனஜா தம்பதியின் மகன் ஜெயக்குமார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கோபி அருகே உள்ள போடி சின்னாம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி - பூங்கோதை தம்பதியின் மகள் வைஷ்ணவி, பி.எஸ்சி., ஐ.டி. பட்டதாரி. இவர்களது திருமணம் கோபி அருகே உள்ள அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. திருமணம் முடிந்து மணமக்களை பெண் வீட்டிற்கு அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றனர். மணமக்கள் சென்ற மாட்டு வண்டியின் பின்னால் உறவினர்கள், நண்பர்கள் படைசூழ சென்றனர்.