சாத்தான்குளம், டிச. 10: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி சாத்தான்குளம், திருச்செந்தூர் ஒன்றியங்களில் நேற்று ஒரே நாளில் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், 180 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 14 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி மற்றும் 1 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக டிச.27ம்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. வரும் 16ம்தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அரசூர், புத்தன்தருவை, பன்னம்பாறை, நடவக்குறிச்சி ஆகிய ஊராட்சிக்கு தலா ஒருவர் என 4பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் வெறிச்சோடி காணப்பட்டது.