பேரணாம்பட்டில் பைப்லைன் உடைந்து ஒரு மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு, டிச.10: பேரணாம்பட்டு ஒரு மாதமாக பைப்லைன் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரணாம்பட்டு காமராஜர் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உட்பட 21 வார்டு பொதுமக்களுக்கும் குடிநீர் பயன்பாட்டிற்காக பத்தலபல்லி, மதினாப்பள்ளி, மலட்டாற்றின் கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி தொட்டியிலிருந்து பேர்ணாம்பட்டில் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், காமராஜர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் பைப்லைன் சரிசெய்ய சாலையில் பள்ளம் தோண்டி பைப் லைன்களை சீர்மைத்தனர். ஆனால், அதை சரியான முறையில் சீரமைக்காததால் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது.

மேலும், குடிநீர் வினியோகம் செய்யும் நேரத்தில் மணிக்கணக்கில் சாலையில் வீணாக சென்று குடியிருப்புகள் அருகில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தொடர்ந்து, சாலையில் தேங்கும் தண்ணீரால் கொசுப்புழு உற்பத்தியாகும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: