வேலூர், டிச.10: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வீடுகள் மட்டுமின்றி மலைகள் மற்றும் திருக்கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இன்று கார்த்திகை தீப பெருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சார்பனாமேடு, சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மலை உச்சிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் வேலூர் சார்பனாமேடு கோட்டை மலை உட்பட சலவன்பேட்டை மலை, பகவதிமலை, சைதாப்பேட்டை மலை, காகிதப்பட்டறை மலை, சத்துவாச்சாரி மலை உச்சிகளில் அந்தந்த பகுதி இளைஞர்களால் வீடுகளில் சேகரிக்கப்படும் எண்ணையை கொண்டு மகா தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது.