×

ஆரணி பனையூர் ஊராட்சிக்கு ெசல்லும் சாலையில் சாய்ந்து ஆபத்தான மின்கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்

ஆரணி, டிச.9: ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சிக்குட்பட்ட பனையூர், வடக்கமேடு, ஓகையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என இந்த சாலை வழியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட நகரங்களுக்கு     பனையூர் கூட்ரோட்டிற்கு வந்து தான் செல்ல வேண்டும். அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனை சீரமைக்க சாய்ந்துள்ள மின்கம்பங்களில் ஏறினால் ஆபத்து ஏற்படும் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் இதனை சரிசெய்யாமல் உள்ளனர்.

இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே பேராபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...