நெல்லை,டிச.10: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெங்காயம் விலை உயர்வின் காரணமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஎஸ்பி இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு; சமையலுக்கு பயன்படுத்தும் அத்தியாவசியமாக தேவைப்படும் வெங்காயம் தற்போது விலை உயர்வின் காரணமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளன. இதன்படி காவல்துறை இயக்குனர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பிரதீப் வி பிலிப் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி மதுரை தென்மண்டலம் டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மற்றும் போலீசார் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் ஆகிய மார்க்கெட்களில் வெங்காயம் பதுக்கல் குறித்து நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.