கடையம்,டிச.10: தென்காசி மாவட்டத்துடன் கடையம் குறுவட்டம், ஆழ்வார்குறிச்சி குறு வட்டங்கள் இணைக்கபட்டது. இதனையடுத்து அதற்கான வரையரைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையங்கள் அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சப் டிவிசன் கட்டுபாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்சப்களில் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையங்கள் ஆலங்குளம் சப் டிவிஷனுடன் இணைக்கபட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அரசு அதிகாரிகள் தரப்பிலும் இதற்கு சாதகமாக பதில் வருகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிப்பாணையும் அரசு இதுவரை அறிவிக்கபடவில்லை. தற்போது கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி மக்களிடத்தில் முக்கியமான பிரச்னைகள் குறித்து முறையிட அம்பை செல்வதா? ஆலங்குளம் செல்வதா? என தெரியாமல் திணறி வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகளில் சமரசம் செய்ய வழியில்லாமல் பிரச்னை வளரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.