சென்னை: போரூரில் உள்ள ஏடிஎம்மில் ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் தப்பியது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போரூர் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் கர்நாடகா வங்கி மற்றும் அதன் ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள், மெஷினை உடைக்க முயன்றனர். சிசிடிவி பதிவின் மூலம் இந்த தகவல் வங்கியின் ஐதராபாத் தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போரூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. பணம் வைக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பணம் தப்பியது.