×

பெரியபாளையத்தில் விஷப்பூச்சிகளின் புகலிடமான பாழடைந்த பிடிஓ அலுவலகம்

ஊத்துக்கோட்டை, டிச. 10: பெரியபாளையத்தில் பழுதடைந்து புதர்கள் மண்டிக்கிடக்கும் பழைய பிடிஓ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் கிராமத்தில் கடந்த 1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி சமுதாய நலத்திட்டத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம்  என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, அதே வருடம் ஊத்துக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம் என டிசம்பர் 14ம் தேதி அப்போதைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் 43 வருடங்களுக்கு பிறகு பழுதடைந்த காரணத்தால்  2004ம் ஆண்டு இதன் அருகிலேயே புதிய அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 53 ஊராட்சிகள்  செயல்பட்டு வருகிறது.

இந்த 53 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, சாலை வசதி, தெருவிளக்கு, திருமண உதவித்தொகை, பசுமை வீடுகள், சத்துணவு கூடம், அங்கன்வாடி என பல்வேறு பிரச்னைகள் குறித்து கூற  பொதுமக்களும், ஊராட்சி செயலாளர்களும்  இந்த அலுவலகத்துக்கு வர வேண்டும். இந்த அலுவலகத்தில் பிடிஓக்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் 53 பேர் என 78க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், தற்போது பிடிஓ அலுவலகத்தின் பின்புறம் உள்ள பழைய அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து செடி, கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இதில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உருவாகி தற்போதுள்ள அலுவலகத்தில் நுழைகிறது. அலுவலக ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே புதர் மண்டி கிடக்கும் பழைய பிடிஓ அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : office ,PDO ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...