பாலக்காடு. டிச.9: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் கார்த்திகை ஏகாதசி விழாவையொட்டி அலங்கரிங்கப்பட்ட உற்சவர் மூன்று யானைகள் மீது முக்கிய வீதிவழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கார்த்திகை ஏகாதசி விழாவையொட்டி கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து குருவாயூர் கிழக்கு கோபுர நடையிலிருந்து உற்சவர் அலங்கரித்த மூன்று யானைகள் மீது பஞ்சவாத்ய மேளத்தாளங்களுடன் வீதியுலா புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் வழியாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்து. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை கோயில் வளாகத்தில் வேளி ஊர்வலம் நடந்தது. மூலவர் சன்னதியில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.