சூலூர், டிச.9: சூலூர் விமானப் படைத்தளத்திற்கு மேலும் 700 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் என்ற தகவலால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சூலூரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானப்படை தளம் உள்ளது. இங்கு தேஜஸ் ரக விமானங்கள் உட்பட பல வகையான போர் விமானங்கள் உள்ளன. இதுதவிர, விமானம் பழுது நீக்கும் மையமும் செயல்பட்டு வருகிறது.இந்த விமானப்படை தளத்தை விரிவாக்கம் செய்வதற்காக கோவை மாவட்டத்தில் சூலூர், கலங்கல், அப்பநாய்க்கன்பட்டி, காடம்பாடி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமம் உள்ளிட்ட விவசாய நிலங்கள் சுமார் 300 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளதாக 2012ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இது குறித்த நிலங்களின் விபரம் சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இதனால், மேற்கூறிய கிராமங்களில் குறிப்பிட்ட நிலங்களை பத்திரப் பதிவு செய்வது நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளிவந்து 8 ஆண்டுகளாகியும் நிலத்தை அரசு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.