×

பிட்காயின் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தம்பதியரை பிடிக்க தனிப்படை உடுமலையில் முகாம்

கோபி, டிச. 9:  அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம், உடுமலையை சேர்ந்த தம்பதியரை கைது செய்ய தனிப்படை போலீசார் உடுமலைக்கு சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா, நண்பர் வேலுச்சாமி, மதுரையை சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்து ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி உள்ளனர். அதில் ரூ.2.80 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் வரை கமிஷன் கொடுப்பதாக கூறி உள்ளனர். அதை நம்பிய கங்காதரன் அவர்களிடம் ரூ.2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள் அதன் பின்னர் தரவில்லை.

 இது குறித்து கங்காதரன் கேட்ட போது, காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனால் கங்காதரன் நிறுவனம் குறித்து விசாரித்த போது பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வது போன்ற போலியான வெப்சைட் உருவாக்கி, இந்தியா முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை வசூல் செய்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர்.  இது குறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட திட்டத்தின் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி வரை மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். கங்காதரன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் இரண்டு தனிப்படை போலீசார் உடுமலை எஸ்.வி.புரத்தில் சுவேதாவின் தந்தை வீட்டிற்கு சென்றனர். அங்கு யாருமில்லாத நிலையில், வழக்கில் தொடர்புடைய குட்டிமணியை தேடி திருச்சி சென்றுள்ளனர்.

Tags : group camps ,Udumalai ,
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்