×

காவேரிப்பட்டணம் அருகே தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

காவேரிப்பட்டணம், டிச.9: காவேரிப்பட்டணம் அருகே 10 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து, 2 வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி அடுத்த சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் மெகிலன்(2). இவரது வீட்டின் அருகில் கழிப்பறை கழிவுநீர் செல்ல 10 அடி ஆழத்தில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால், தொட்டியின் அருகில் ஏரி தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதை சாமுண்டி குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில், குழந்தை மெகிலன் வீட்டினருகில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை. அவனது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்த போது, தண்ணீர் தேங்கிய தொட்டி மூடப்படாமல் இருந்ததை பார்த்து, அதன் உள்ளே எட்டி பார்த்தனர்.

அதில், குழந்தை மெகிலன் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், குழந்தையை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kaveri ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...