களக்காடு அருகே மனைவி கல்லறையில் விஷம் குடித்த விவசாயி சாவு

களக்காடு, டிச.9: களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் விவசாயி சாந்தகுமார் (60). இவரது மனைவி கடந்த 1 ஆண்டுக்கு முன் உடல்நல குறைவால் இறந்தார். மனைவி இறந்ததில் இருந்து சாந்தகுமார் மன வேதனையில் இருந்தார். இதனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சாந்தகுமார் மனைவி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி அவரது மகன் பாலசிங் (35) களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: