×

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய க(ந)டக்க முடியாமல் பயணிகள் அவதி

திருச்சி, டிச.9: திருச்சி ரயில்வே ஜங்ஷன் சுரங்கப்பாதை படிக்கட்டு இடுக்குகளிலிருந்து நீரூற்று போல தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துடன் கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழியாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. 50க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முதலாவது பிளாட்பாரத்தை தவிர பிற பிளாட்பாரங்களில் நிற்கும் ரயில்களிலிருந்து வெளியே வரும் பயணிகள் சுரங்கப்பாதையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் சுரங்கப்பாதையிலிருந்து மெயின் நுழைவு வாயிலுக்கும், பின்பக்கம் கல்லுக்குழிக்கும் செல்ல வழி உள்ளது. கல்லுக்குழிக்கு செல்லும் சுரங்கப்பாதை படிக்கட்டுகளின் இடுக்குகளிலிருந்து நீரூற்றுபோல தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் பயணிகள் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். தொடர்ந்து நீர் கசிவு ஏற்பட்டால் படிக்கட்டுகள் முழுவதும் சேதமடையும் அபாயம் உள்ளது. முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் படிக்கட்டுகளில் ஏற சிரமப்பட்டு செல்கின்றனர். வழுக்கி விழுந்துவிடுவோமோ என்ற அச்ச உணர்வுடனே பயணிகள் கடந்து செல்கின்றனர். இந்த படிக்கட்டுகளில் பலர் வழுக்கியும் விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தண்ணீர் கசிவை தடுத்து நிறுத்த வேண்டும். பயணிகள் எந்தவித சிரமமுன்றி பாதையை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Passengers ,Trichy Junction Railway Station ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...