ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி 17ம் தேதி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 9: ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் வரும் 17 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கும்பகோணத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பேரமைப்பு மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ்ராஜா, மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார்.

கூட்டத்தில் சரக்கு சேவை வரியை உயர்த்துவது வணிகர்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பொருளாதார தேக்க நிலையாக உள்ள இந்த நேரத்தில் இந்த அறிவிப்பால் விலைவாசி உயரும். எனவே வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் வணிகத்தால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதித்து பொருளாதாரம் சீர்குலைகிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17ம் தேதி கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன் ஆர்பாட்டம் நடத்துவது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக வாய்ப்பு உள்ளதாக சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் உறுதியளித்தார். அதன் அடிப்படையில் காலதாமதம் செய்யாமல் கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிப்பை தமிழக முதல்வர் விரைந்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

Related Stories: