காரைக்கால், டிச. 9: காரைக்காலில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இணைய
தளம் மற்றும் செயலி வழியாக மின் கட்டணம் செலுத்தும் சேவையை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மின்சாரத்துறை மூலமாக நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்துவதற்கு எளியமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின்சாரத்துறை அலுவலகத்திற்கு வருவதோ, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதோ தேவையில்லை. நுகர்வோர் நேரடியாக வருவது தவிர்க்கப்படுவதோடு, வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்த சேவை மூலமாக எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம்.மேலும் சூரிய ஒளியில்இருந்து மின்சாரம் பெறக்கூடிய புதிய முயற்சி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. மின் துறை தலைமை அலுவலகத்தில் மாடியில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகள் பொருத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.