புதுச்சேரி, டிச. 9: இந்திய வாதவியல் சங்கத்தின் 35வது ஆண்டு மாநாடு புதுச்சேரி ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, துபாய், இலங்கை, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50க்கும் மேற்பட்ட வாதநோய் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ஜிப்மர் மருத்துவமனை நாட்டில் உள்ள முக்கிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் மூன்றாவதாக உள்ளது. இந்திய வாதவியல் சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஜிப்மர் மாணவர்தான். நாட்டில் மருத்துவ ஆராய்ச்சி மிக முக்கியம். இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளூரிலேயே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மருத்துவ நிதியுதவியை குறைந்த அளவே ஒதுக்கி வருகிறது.