பூதப்பாண்டி,டிச.9: தாயிடம் அவசர அவசரமாக தாய்பால் குடித்ததில் ஐந்து மாத குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டிதோப்பு அருகே உச்சம்பறை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு ஐந்து மாதத்தில் ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில் நேற்று காலை மாரிமுத்துவின் மனைவி குழந்தைக்கு தாய்பால் கொடுத்துள்ளார். இரவு நேரத்தில் சரியாக பால் குடிக்காததாலும் பசி அதிகமாக இருந்த காரணத்திலும் தாயிடம் குழந்தை அவசர அவசரமாக பால் குடித்துள்ளது. இதில் குழந்தைக்கு தாய் பால் புரையேறியது. இதனால் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டுள்ளது. இதனை கண்ட மாரிமுத்து மற்றும் அவர் மனைவியும் குழந்தையை தூக்கிக் கொண்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சு திணறி ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதனை கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். தாயிடம் பால் குடித்த ஐந்து மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.