நகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்

புதுச்சேரி, டிச. 5: முத்தியால்பேட்டையில் மாடு பிடிக்க சென்ற நகராட்சி அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுவை, முத்தியால்பேட்டை, பாரதிதாசன் வீதியில் வசிப்பவர் சுப்பிரமணி (39). புதுச்சேரி நகராட்சியில் துப்புரவு பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை குறிஞ்சி வீதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை ஊழியர்கள் உதவியுடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மாடுகளின் உரிமையாளர்களான பழனி, மணி இருவரும் சுப்பிரமணியை அசிங்கமாக திட்டியதோடு, அவரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததோடு கையால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் பழனி, மணி 2 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத  5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த முத்தியால்பேட்டை எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: