×

எலி மருந்து சாப்பிட்டு பிளஸ்1 மாணவி தற்கொலை

புதுச்சேரி,  டிச. 5: சண்முகாபுரத்தில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால்  விரக்தியடைந்த பிளஸ்1 மாணவி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, சண்முகாபுரம்,  சொக்கநாதன்பேட்டையில் வசிப்பவர் தனலட்சுமி (40). விதவையான இவர் தனது  அக்காள் வெண்ணிலா குடும்பத்தினர் ஆதரவுடன் மகள் மோனிஷாவுடன் (17) தங்கி  கூலி வேலை செய்து வருகிறார். மோனிஷா அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1  பயின்ற நிலையில், கடந்த 28ம்தேதி வீட்டில் வேலை எதையும் செய்யாமல் செல்போன்  பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது தாய் கண்டித்த  நிலையில், விரக்தியடைந்த மோனிஷா அங்கிருந்த எலிமருந்தை எடுத்து  சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலையில் மயக்கம் ஏற்படவே தான் எலிமருந்து  சாப்பிட்ட விவகாரத்தை, மோனிஷா, தாயிடம் கூறிய நிலையில் அதிர்ச்சியடைந்த  அவர் அரியூர் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தார். பின்னர்  அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்ட மோனிஷா அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து கோரிமேடு போலீசில், வெண்ணிலா புகார் அளித்தார். அதன்பேரில்  வழக்குபதிந்த எஸ்ஐ இனியன் தலைமையிலான போலீசார் மோனிஷாவின் உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து  உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கனவே கணவனை இழந்த தனலட்சுமி, தனது மகளையும் பறிகொடுத்ததால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது.

Tags : Rat ,
× RELATED திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல்...