×

சங்கராபுரம் அருகே ஓடையில் வாலிபர் சடலம்

சங்கராபுரம், டிச. 5: சங்கராபுரத்தை அடுத்த லக்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் கல்வராயன்மலையில் இருந்து வரும் ஓடையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது சங்கராபுரம் அடுத்த பரமனத்தம் கிராமத்தை சேர்ந்த ராயப்பிள்ளை மகன் அம்சவேல்(28) என தெரியவந்தது. இவர் லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் உரக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அம்சவேல் வீடு திரும்பவில்லை. நேற்று அவர் ஓடையில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறந்த அம்சவேலுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. 3 மாத பெண் குழந்தை உள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அம்சவேலின் தந்தை வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Sankarapuram ,stream ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்