×

விவசாயிகள் கவனிக்க.. ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்

விருதுநகர், டிச. 5: விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டிற்கான ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு தொடங்கி உள்ளது. வேளாண் பயிர்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, பாசிப்பயறு, உளுந்து, துவரை, பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய டிச.20, நிலக்கடலை, சூரியகாந்தி பயிர்களுக்கு 2020 ஜன.20, எள் பயிருக்கு 2020 பிப்.15, நெற்பயிருக்கு 2020 மார்ச் 16, கரும்பு பயிருக்கு 2020 அக்.31 ஆகியவை கடைசி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.பயிர்காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் ரூ.356, சோளம் ரூ.164, கம்பு ரூ.150, ராகி ரூ.140, பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.237, நிலக்கடலை ரூ.323, எள் ரூ.128, பருத்தி ரூ.1135, சூரியகாந்தி ரூ.186 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெற்பயிருக்கு ரூ.338, கரும்பு பயிர்: கரும்பு நடவு சொட்டு நீர்ப்பாசன பயிருக்கு ரூ.2,160, சொட்டுநீர் பாசனம் இல்லாத கரும்புக்கு ரூ.1,560, கரும்பு மறுநடவு சொட்டு நீர் பாசன பயிருக்கு ரூ.1,560, சொட்டு நீர் பாசனம் இல்லாத மறு நடவுக்கு ரூ.1,260 செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொதுசேவை மையங்கள் மற்றும் தேசிய வங்கிகளின் மூலமாக பயிர் காப்பீடு பதிவு செய்ய வேண்டும். பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகள் தங்களது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், பட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rabi ,
× RELATED பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி