திருப்புவனம், டிச.5: திருப்புவனம் மட்டை ஊருணி நிரந்தரமாக செயல்படும் வகையில் நடுகல் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றின் கரையில் மேம்பாலம் அருகே மட்டை ஊருணியில் நீண்டகாலமாக வாரச்சந்தை நடந்து வந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான ஊருணிகள், குளங்கள் வரத்துக்கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரினர். இதேபோல் மட்டை ஊருணியில் நடந்து வந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு தூர்வாரப்பட்டது. ஊருணி நிரந்தரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து ஊருணியில் நடு மண்டபம் அமைத்து கல் சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானப் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இது குறித்து தமாகா நிர்வாகி அயோத்தி கூறுகையில், திருப்புவனத்தில் மார்க்கண்டேய ஊருணி எனப்படும் மட்டை ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போனது. மார்க்கண்டேய ஊருணியை தூர் வரவேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தனிடம் இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரப்பட்டது. நிரந்தமாக ஊருணி இருக்கும் வகையில் நடுமண்டபம், கல் சுற்று சுவர் போன்ற கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. பிரமனூர் கால்வாயிலிருந்து ஊருணிக்கு தண்ணீர் வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.