×

பனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு

சேலம், டிச.5:  பனமரத்துப்பட்டி விவசாயிகள், காய்கறி விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. பயிர்களின் இடைவெளிக்கு ஏற்ப மானிய தொகை மாறுபடும். இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: பனமரத்துப்பட்டி விவசாயிகளுக்கு தேவையான தக்காளி, கத்தரி, மிளகாய் குழித்தட்டு நாற்றுகளாகவும், வெண்டை, பாகல், பீர்க்கன், சுரை, கொத்தமல்லி, சிறிய வெங்காயம் ஆகிய காய்கறி விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார், ரேஷன் அட்டை, சிட்டா நகல், அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், பனமரத்துப்பட்டி தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்