சேலம், டிச.5: சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அனைத்து அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். அவர் கூட்டத்தில் பேசியதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 385 கிராம ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கும் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களும் சாதாரண தேர்தல்கள் வரும் டிசம்பர் 27ம், 30ம் ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. இத்தேர்தலில் மொத்தம் 8,11,461 ஆண் வாக்காளர்களும், 7,93,276 பெண் வாக்காளர்களும்52 இதர வாக்காளர்களும் என மொத்தம் 16,04,789 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளன. சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஆண்களுக்கு 43 வாக்குச்சாவடிகளும், பெண்களுக்கு 43 வாக்குச்சாவடிகளும், ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கான 2,655 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தலுக்காக 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.