தஞ்சை, டிச. 5: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி வார்டுகள், ஊராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள முதன்மை அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் அனைத்து தொடர்பு அலுவலர்களுக்கும் தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் தேர்தல் அறிவிக்கை வெளியிடுதல், தேர்தலில் வேட்புமனு பெறுதல், பரிசீலித்தல், வாக்குசீட்டு அச்சடித்தல், மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டல அலுவலர்களை நியமித்தல், வாக்கு எண்ணிக்கை மையம் வரைபடத்துடன் இறுதி செய்தல், கல்வி துறையை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட இவர்களது கடமைகளும், பொறுப்புகளும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.