×

பொதுமக்கள் வழங்கினர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திலிருந்து அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திருந்து புதிய குக்கர் மற்றும் தட்டு உள்ளிட்ட பொருட்களை சிலர் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் விதிமுறைகள் இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே அறிவித்து நடைமுறையில் உள்ள திட்டங்களை தொடர வாய்ப்புள்ளது. ஆனால் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் முதல் சிலர் புதிய குக்கர்களையும் மற்றும் மூட்டையாக கட்டிக்கொண்டு சில பொருட்களை எடுத்து செல்கின்றனர் என்ற தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து நேற்றும் சென்று பார்த்தபோது அவ்வலுவலகத்திலிருந்து புதிய குக்கர் மற்றும் சில பொருட்களை கொண்ட பைகளை ஏராளமான பெண்கள் கைகளில் எடுத்துச் சென்றனர். சில ஆண்கள் தங்கள் இருச்சக்கர வாகனத்தில் ஏராளமானதை எடுத்துச் சென்றனர். தேர்தலுக்காக வழங்கப்படுகிறதா? அல்லது அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படுகிறதா என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

எது இருப்பினும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளபோது அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது பல பிரச்சினைகளை உருவாக்கும். ஆளுங்கட்சியினர் தேர்தல் தொடர்பாக குறிப்பிட்ட நபர்களுக்கு இலவச பொருட்களை அளிக்கின்றனர் என எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் குறைகூற நேரிடும். இதுகுறித்து இப்பகுதி தேர்தல் அதிகாரி உரிய பதில் தந்தால் மட்டுமே இது யாருக்காக வழங்கப்பட்டது என தெரியவரும்.


Tags : Anganwadi Centers ,Child Development Project Office ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...