தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எண்ணூரில் இருந்து சிமென்ட் மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக கள்ளக்குறிச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 6 மணியளவில் தாம்பரம் இரும்புலியூர் அருகே லாரி வந்தபோது சாலையின் வளைவில் லாரியை டிரைவர் திரும்ப முயற்சித்தார். இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பின் மீது மோதியது. பின்னர், சாலையிலிருந்து இடதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து தாம்பரம் - பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் சென்று விழுந்தது. இதில் லாரி ஓட்டுனர் கார்த்திகேயனுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.