தென்தாமரைகுளம், டிச. 5: சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (6ம் தேதி) துவங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசுவாமி பக்தர்களுக்கு கூறிய அறிவுரைகளை திருஏடாக வாசித்து பக்தர்களுக்கு கூறுவது வழக்கம். இந்த திருஏடு வாசிப்பு திருவிழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வருட திரு ஏடு வாசிப்புத் திருவிழா நாளை (6ம்தேதி) துவங்குகிறது. முதல் நாளான நாளை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், திருஏடு வாசிப்பு துவக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பால.ஜனாதிபதி திரு ஏடு வாசிப்பை துவக்கி வைத்து விளக்க உரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு வாகன பவனியும் தொடர்ந்து அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
திருக்கல்யாண நிகழ்ச்சியானது விழாவின் 15ம் நாளான வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. முன்னதாக பக்தர்கள் அய்யாவின் திருக்கல்யாணத்திற்கு சீர் வரிசை கொடுக்கும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பட்டாபிஷேக திருவிழா திருஏடு வாசிப்பின் 17ம் நாள் விழாவான வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தலைமை பதி பூக்களாலும், விளக்குகளாலும் வாழைக்குலைகள் கட்டி அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம் செய்யும் திருஏடுவாசிப்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து வாகன பவனியும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமமும் வழங்கப்படுகிறது.