×

அம்பை, கடையம், வி.கே.புரத்தில் தொடர் மழைக்கு 9 வீடுகள் இடிந்து சேதம்

அம்பை, டிச. 4: அம்பை, கடையம், வி.கே.புரத்தில் தொடர் மழைக்கு 9 வீடுகள் இடிந்து சேதமானது.
அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து செல்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.தொடர் மழை காரணமாக அம்பை இல்லத்தார் வடக்கு தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (60) என்பவரது வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமணன், அவரது மகன் மாரியப்பன் (24) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததால் லட்சுமணன் மனைவி சுப்புலெட்சுமி (55), மகள் சுகன்யா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.இதேபோல் அருகிலிருந்த கந்தசாமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அவர், வெளியூர் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. சுப்பிரமணியபுரம் பொத்தை ராமமூர்த்தி மகன் கருப்பசாமி (34) என்பவரது வீட்டு சாய்ப்பு இடிந்து விழுந்தது. பெரியகுளம் வடக்கு தெருவில் ஆறுமுகம் மனைவி வள்ளியம்மாள் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த அம்பை தாசில்தார் கந்தப்பன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். மேலும் பெரியகுளம் காலனி நடுத்தெருவில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீட்டில் இருந்த மாயாண்டி என்பவரை அங்கிருந்து இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார். அவருடன் ஆர்ஐ முருகன், விஏஓ சூரப்பன், முத்துராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்துறையினர் சென்றனர்.    கடையம்: தெற்கு கடையம் சொரிமுத்து   பிள்ளை தெருவில் சண்முகம் என்பவரது வீடு முற்றிலும்   இடிந்து விழுந்தது. இதில் மீட்டர் பெட்டியும் சேதமடைந்து வயர் அறுந்து   விழுந்தது. கடையம் மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து மின்   இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.முருகாண்டியூரில் சொரிமுத்து, சூடாமணி ஆகியோரது வீடும்,   சிவநாடானூரில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.    வி.கே.புரம்: கோட்டைவிளைபட்டியை சேர்ந்தவர் முருக அரசன். இப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக இவரது வீடு, நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது. சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.



Tags : houses ,Kadaya ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...