போடி, டிச.4: போடியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுகவினருக்கு நேர்காணல் நடந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி போடி வர்த்தக சங்க கட்டிடத்தில் போடி நகர ஒன்றிய திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போடி ஒன்றியத்திலுள்ள 15 கிராம ஊராட்சிகளிலுள்ள வார்டுகளில் போட்டியிட திமுக சார்பில் விருப்பனு கொடுத்தவர்கள் சுமார் 250 பேர் நேர்காணலுக்கு வந்தனர். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் குரு.இளங்கோ, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆஜிப்கான் மற்றும் நகர ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.