இரண்டு கட்ட தேர்தலுக்காக 6 மற்றும் 7 ஒன்றியங்களாக பிரிப்பு மதுரை மாவட்டத்தில்

மதுரை, டிச. 4: மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக பகுதியில் உள்ள உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில், மொத்தம் 13 ஒன்றியங்கள் உள்ளன. இதில் மதுரை வைகை ஆற்றின் வட பகுதியில், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. அதேபோன்று வைகை ஆற்றின் தென் பகுதியில், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் என 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், மீதியுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனை ஏற்று முதல் கட்டத்தில் எந்தெந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல்கட்ட தேர்தல், 2வது கட்டதேர்தல் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ஆனால் நேற்றிரவு வரை அறிவிப்பு ஆணை மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘மாவட்டத்தில் 2 கட்டமாக நடைபெற வேண்டிய தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் உத்தரவு இன்னும் வழங்கவில்லை. இதனால், எந்தெந்த பகுதிக்கு முதல் கட்டம், 2வது கட்டம் என கூற முடியவில்லை’ என்றார்.

Related Stories: