×

4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி கோர்ட் முன் பெற்றோர் போராட்டம்

திருவள்ளூர், டிச.4: 4 வயது மகளை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை, விரைந்து முடிக்கக்கோரி உறவினர்களுடன் சேர்ந்து பெற்றோர் திருவள்ளுர் நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களது மகள் 4 வயது சிறுமி. அங்குள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தாள். இந்நிலையில் கடந்த ஜூன் 27ம் தேதி மகளை வீட்டிற்குள் படுக்கவைத்துவிட்டு, வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, மகனை டியூஷன் சென்ட்ரில் விட செந்தமிழ்ச்செல்வி சென்றுள்ளார்.
 
அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீடு திறந்து  இருந்தது. வீட்டில் இருந்த மகளை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடியும் மகள் கிடைக்கவில்லை இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பிறகு வீட்டுக்கு வந்தபோது குளியலறையில் இருந்த தண்ணீர் வாளியில், கோணி பையில் மூட்டை கட்டியபடி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாரின் விசாரணையில், முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சிசுந்தரம் என்பவர் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அடித்துக் கொலை செய்ததும்  தெரியவந்தது. இதையடுத்து  மீனாட்சிசுந்தரத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு குறித்த வழக்கு விசாரணை நேற்று முதன்முறையாக திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, இவ்வழக்கை நீதிமன்றம் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும், தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோஷமிட்டபடி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் போராட்டம் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Parents ,murder trial ,court ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...