×

மாவட்டத்தில் கன மழைபெய்தும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் நிரம்பாத உத்திரமேரூர் ஏரி

உத்திரமேரூர், டிச. 4: மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தபோது, கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் உத்திரமேரூர் ஏரி, முழுவதுமாக நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான, உத்திரமேரூர் வைரமேகன் தடாகம் என்று அழைக்கப்படும் உத்திரமேரூர் ஏரி. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 2719 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, 20 அடி ஆழம் கொண்டது. இதில் இருந்து, 8 மதகுகள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் வேடபாளையம், காக்கநல்லூர், முருக்கேரி, நீரடி, புலியூர், குப்பையநல்லூர். காவனூர்புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங்கூர், நல்லூர் உள்பட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5462 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஏரி முழு கொள்ளளைவை எட்டினால் விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். இதில் பெரும்பாலும் நெல், கரும்பு, வேர்க்கடலை ஆகியவை பயிரிடப்படும். விவசாயம் மட்டுமின்றி இந்த ஏரி உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், குட்டை என பல்வேறு நீர்நிலைகளுக்கு மிக முக்கிய நீராதரமாகவும் விளங்குகிறது.

மேலும், உத்திரமேரூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதுபோன்ற உத்திரமேரூர் ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள் எதையும் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், கால்வாய்களில் பெரும்பாலான பகுதிகள் பிளாட்டுகள், கட்டிடங்கள் என பல வகைகளில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் முழுவதும் காணாமல் போனது. இதையொட்டி, மழைநீர் ஏரிக்கு வந்து சேராமல் வீணாக வெளியேறுகிறது. எவ்வளவு மழை பெய்தாலும், உத்திரமேரூர் ஏரிக்கு மட்டும் மழைநீர் வந்து சேர்வதே இல்லை. செய்யாற்றங்கரையை ஒட்டியுள்ள அனுமந்தண்டலம் கிராமம் வழியாக ஒரே ஒரு கால்வாய் மட்டும் தற்போது உள்ளது. இந்த கால்வாயும் செய்யாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே ஆற்றுநீர் ஏரிக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததில் மாவட்டத்தில் பெரும்புதூர்,தென்னேரி ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. ஆனாலும், மிகப் பெரிய ஏரியாக கருதப்படும் 20 அடி ஆழம் கொண்ட உத்திரமேரூர் ஏரிக்கு சுமார் 6 அடி நீர் மட்டுமே வந்துள்ளது. இதனால் ஏரியில் மழைநீர், குட்டைபோல் தேங்கியுள்ளது. ஏரிக்கு நீர் வராததால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு, அதன் கால்வாய்களை சீரமைத்து ஆக்கிரமிப்புக்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : lake ,rainfall ,district ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு