நித்திவிளை. டிச.4: குடிபோதையில் தொழிலாளி தொலைத்த தங்க செயினை, அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.கொல்லங்கோடு அருகே ஊரம்பு. பஞ்சவிளை என்னுமிடத்தில். போதையில் கிடந்த குடிமகன் பக்கத்தில் இரண்டு பவுன் எடையுள்ள ஒரு தங்க செயின் கிடந்துள்ளது. இதை பார்த்த சூழால் ஊராட்சி முன்னாள் உறுப்பினர் சுகுமாரன் என்பவர் அந்த செயினை எடுத்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதேநேரம் போதை தெளிந்த குடிமகன் செயின் தொலைந்தது தெரியாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். செயின் இல்லாமல் வந்த கணவனை பார்த்த மனைவி செயின் எங்கே என்று கேட்டுள்ளார். பின் மறுநாள் போதை ஆசாமி முன்னாள் உறுப்பினர் சுகுமாரனை சந்தித்து, கீழே கிடந்தது தனது செயின் தான் என கேட்டுள்ளார். செயின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டதாக சுகுமாரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து குடிமகன் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் சென்று தங்க செயின் என்னுடையது என்றும் அதை தரும்படியும் கேட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் குடிமகன் ஊரம்பை அடுத்த கேரள பகுதியான பாவற. அம்பனாவிளை என்னுமிடத்தை சார்ந்த முருகன் (38). என்றும் கட்டிடத் தொழிலாளியான இவர் போதையில் செயினை அறுத்து எறிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகனிடம் மனைவியை அழைத்து வந்தால் தான் செயினை கொடுப்பதாக கூறினர். தொடர்ந்து முருகன் தனது மனைவி ஷீபாவை கூட்டி வந்தார். பின்னர் முன்னாள் உறுப்பினர் சுகுமாரன். கொல்லங்கோடு எஸ் ஐ மகேஷ் முன்னிலையில் ஷீபாவிடம் செயினை ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் முருகனை எச்சரித்து அனுப்பினார்.