வேலூர், டிச.4: பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் படுகொலையில் விடுதலையான 13 பேரும், ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் வேலூரில் தங்கி உள்ளனர். இவர்கள் வரும் 8ம் தேதி எஸ்பி முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் முருகேசன். இவர் உள்பட 7 பேர் கடந்த 1996ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பிறந்த நாளையொட்டி அவர்களில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.பின்னர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மீதமுள்ள 13 பேரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிரத்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், விடுதலையான 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக்கூடாது. வேலூரில் தங்கி இருக்க வேண்டும். 1வது மற்றும் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் எஸ்பி முன்னிலையில் ஆஜராக வேண்டும். 2வது மற்றும் 4வது ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மாவட்டத்தின் நன்னடத்தை அலுவலர் முன்பு ஆஜராக வேண்டும்.