ஆம்பூர், டிச.4: ஆம்பூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் சேறும், சகதியுமான சாலைகளாக இருப்பதை கண்டித்து நேற்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக குடிநீர் வினியோகத்திற்கான பைப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேலும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் மண் குவிந்து சேறும், சகதியுமாக மாறி உள்ளது.தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த சகதி நிறைந்த சாலையை சீரமைத்து தர பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், பல இடங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், முதியவர்கள், பெண்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட பலர் சகதியில் வழுக்கி விழுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.