வேலூர், டிச.3: தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் உணவு உண்பதை படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களின் மூலம் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவகல்வி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தினமும் தக்காளி சாதம், கலவை சாதம், பருப்பு சாதம் மற்றும் வேக வைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சத்துமாவும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் சரியாக கிடைப்பதில்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். எனவே குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் உணவு உண்ணுவதை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.