வேலூர், டிச.3: வேலூர் சத்துவாச்சாரியில் தனியார் மருத்துவமனை டாக்டர் வீட்டில் புகுந்த மர்ம கும்பல் 5 சவரன் நகைகள் மற்றும் ₹69 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி கோர்ட் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்(40). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சஞ்சீவ் கடந்த மாதம் 27ம் தேதி தன் சொந்த வேலையாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, உள்அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோ லாக்கரை உடைத்து அதிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ₹69 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.