×

நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்குவதை கைவிட வேண்டும் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, நவ.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் நடத்துனர் இல்லா பேருந்துகளில் வசூல் குறைந்துவிட்டதால் மற்ற பேருந்துகளில் இருந்து வசூலை எடுத்து நடத்துனர் இல்லா பேருந்துகள் லாபகரமாக இயங்குவதாக கணக்கு காண்பிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு அனைத்து மண்டங்களில் இருந்து நடத்துனர் இல்லா பேருந்துகள் இயக்குவது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்தினர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் எதிர்ப்புகளை மீறி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை போக்குவரத்து மண்டலத்தில் புதுக்கோட்டை-திருச்சி, அறந்தாங்கி-திருச்சி, திருச்சி-மதுரை ஆகிய வழித்தடங்களில் 10 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் கடந்த ஒரு ஆண்டாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் நடத்துனருடன் இயங்கியபோது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை தினசரி வசூல் செய்தது. ஆனால் நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்க தொடங்கிய நாட்களில் இருந்து சுமார் ரூ.10ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே தினசரி வசூல்லானது. இதற்கு முக்கிய காரணம் நடத்துனர்கள் இருந்தால் பேருந்து நிலையத்தில் மட்டுமில்லாமல் நகர் பகுதியில் சில இடங்களில் பயணிகள் ஏறுவார்கள்.

தற்போது நடத்துனர் இல்லாமல் இருப்பதால் பேருந்து நிலையத்தில் ஏறும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கேயே பயணசீட்டு வழங்கிவிட்டு நடத்துனர் இறங்கிவிடுகிறார். இதன் பிறகு எந்த இடத்திலும் பயணிகள் ஏற்றுவதில்லை. இதனால் வசூல் முற்றிலும் குறைந்துவிட்டது. இந்நிலையில் நடத்துனர் இல்லா பேருந்துகள் வசூலில் குறைந்துவிட்டு என்று போக்குவரத்து தெரிவிப்பதற்கு பதில் இந்த திட்டம் லாபகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக காண்பிக்க அதிக வசூல் கிடைக்கும் பேருந்துகளின் பணங்களை எடுத்து வசூல் குறைந்த நடத்துனர் இல்லா பேருந்துகள் லாபகரமாக இருப்பதாக பொய்யான கணக்கு காட்ட வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது: விமானத்தில் கூட பயணிகளுக்கு திடீரென பிரச்னை ஏற்பட்டால் விமான பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது பேருந்துகளில் நடத்துனர் இல்லா பேருந்து அறிமுகப்படுத்தி உள்ளனர். நடத்துனர் வெறும் பயணசீட்டு மட்டும் வழங்கக்கூடியவர் அல்ல. பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அசவுகரியங்களை நிவர்த்தி செய்ய கூடியவர். நடத்துனர் இல்லா பேருந்து இயக்குவதை கைவிட வேண்டும். பழைமுறைப்படி நடத்துனருடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர்.

Tags : conductors ,
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது