×

அறந்தாங்கியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு திருக்குறள் புத்தகம்

அறந்தாங்கி, நவ.22: அறந்தாங்கியில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு எஸ்எஸ்ஐ திருவள்ளுவன் திருக்குறள் புத்தகம் வழங்கினார்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்போது, தலையில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகன விபத்துக்களில் சுமார் 90 சதவீத இறப்புகள் தலைக்காயத்தாலேயே ஏற்படுகின்றன. இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டாலும், அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு காவல்துறையினர் இனிப்பு வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அறந்தாங்கி போக்குவரத்து காவல்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ள திருவள்ளுவன் நேற்று அறந்தாங்கி அண்ணா சிலை அருகே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு போக்குவரத்து எஸ்எஸ்ஐ திருவள்ளுவன் திருக்குறள் புத்தகத்தை வழங்கி ஊக்குவித்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ